TNPL 2026: மதுரை பேந்தர்ஸை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்ற கோவை கிங்ஸ்!
TNPL 2026 இறுதிப்போட்டியில் மதுரை பேந்தர்ஸை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விடா கோவை கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்ட்ரே சித்தார்த் ஆட்டநாயகனாகவும், பலசுப்ரமணியம் சச்சின் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2026 தொடரின் இறுதிப்போட்டியில் விடா கோவை கிங்ஸ் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்திய கோவை கிங்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் TNPL வரலாற்றில் கோவை கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும், ஆண்ட்ரே சித்தார்த் மற்றும் பலசுப்ரமணியம் சச்சின் ஆகியோர் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தனது 20வது பிறந்தநாளில் இறுதிப்போட்டியில் களமிறங்கிய ஆண்ட்ரே சித்தார்த் அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் இடம்பெற்றிருந்தன. அவருடன் இணைந்து விளையாடிய சச்சின் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. மதுரை பேந்தர்ஸ் அணிக்கு வெற்றி பெற 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கைத் துரத்திய மதுரை பேந்தர்ஸ் அணிக்கு கோவை கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே நெருக்கடி கொடுத்தனர். முதல் ஓவரிலேயே மதுரை அணி விக்கெட்டை இழந்தது. தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால், மதுரை அணியின் ரன் சேஸ் தடுமாறியது.
மதுரை அணியில் ஹரி ராகவேந்திரா 14 பந்துகளில் 24 ரன்களும், பாலச்சந்தர் அனிருத் 25 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர். இருப்பினும், கோவை கிங்ஸ் பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டால் மதுரை பேந்தர்ஸ் அணி 14.2 ஓவர்களில் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கோவை கிங்ஸ் அணியின் வெற்றியில் கேப்டன் ஷாருக்கான் மற்றும் மணிமாறன் சித்தார்த் ஆகியோரின் பந்துவீச்சு முக்கிய பங்கு வகித்தது. இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
குறிப்பாக ஷாருக்கான் 2.2 ஓவர்களில் வெறும் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது சிறப்பான பந்துவீச்சு மதுரை அணியின் ரன் சேஸை முற்றிலும் முடக்க உதவியது.
இறுதிப்போட்டியில் 47 பந்துகளில் 82 ரன்கள் குவித்த ஆண்ட்ரே சித்தார்த் Player of the Match விருதை வென்றார். அதே நேரத்தில், முழுத் தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட கோவை கிங்ஸ் அணியின் பலசுப்ரமணியம் சச்சின் Player of the Series விருதைத் தட்டிச் சென்றார்.
இறுதிப்போட்டியிலும் சச்சின் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து கோவை கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.
TNPL-ன் 10வது சீசனை சாம்பியன் பட்டத்துடன் நிறைவு செய்துள்ள கோவை கிங்ஸ், இந்த வெற்றியின் மூலம் தங்களது கோப்பை எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தியுள்ளது.
2022ஆம் ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் கோப்பையைப் பகிர்ந்து கொண்ட கோவை கிங்ஸ், தற்போது தனிப்பட்ட முறையில் தனது இரண்டாவது TNPL பட்டத்தை வென்றுள்ளது.
இறுதிப்போட்டி சுருக்கம்:
விடா கோவை கிங்ஸ் – 182/7 (20 ஓவர்கள்)
மதுரை பேந்தர்ஸ் – 98 (14.2 ஓவர்கள்)
வெற்றி – கோவை கிங்ஸ் 84 ரன்கள் வித்தியாசத்தில்
Player of the Match – ஆண்ட்ரே சித்தார்த்
Player of the Series – பலசுப்ரமணியம் சச்சின்
TNPL 2026 சாம்பியன் – விடா கோவை கிங்ஸ்
Prasanth Subramani