கோவையில் 68 மதுக்கடைகள் மூடல்.. முதல்வர் விஜய் உத்தரவு அமல்!
முதல்வர் விஜய்யின் உத்தரவின்படி கோவையில் கல்வி நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் பஸ் நிலையங்கள் அருகிலிருந்த 69 மதுக்கடைகளில் 68 கடைகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய்யின் உத்தரவையடுத்து, கல்வி நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த மதுக்கடைகளை மூடும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோவை மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களைச் சேர்ந்த மொத்தம் 284 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், வடக்கு மண்டலத்தில் 48 கடைகளும், தெற்கு மண்டலத்தில் 21 கடைகளும் என மொத்தம் 69 கடைகளை மூட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அரசின் அறிவிப்பு வெளியான முதல் நாளிலேயே 4 மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட்டன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் தற்போது அடையாளம் காணப்பட்ட 69 மதுக்கடைகளில் 68 கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள ஒரு மதுக்கடையையும் விரைவில் மூட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Prasanth Subramani