கோவையில் டெசிபல் அளவை மீறினால் அபராதம்... அதிரடி சோதனையில் களமிறங்கிய RTO அதிகாரிகள்!
கோவையில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு RTO அதிகாரிகள் அபராதம் விதித்தனர். டெசிபல் அளவை மீறும் வாகனங்கள் மீது சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தி விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது RTO அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு சோதனையில், அரசு மற்றும் தனியார் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவை மீறி அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது ஆய்வு செய்யப்பட்டது.
சோதனையின்போது விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அனுமதியற்ற ஏர் ஹாரன்களை உடனடியாக அகற்றுமாறும் வாகன உரிமையாளர்களுக்கு RTO அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் சாலைப் பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எதிர்காலத்திலும் இதுபோன்ற சோதனைகள் கோவை முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்பதால், வாகன உரிமையாளர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து, அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுக்குள் மட்டுமே ஹாரன்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Prasanth Subramani