சென்னை டெக் மஹிந்திரா அலுவலகத்தில் தீ விபத்து.. கரும்புகையால் பரபரப்பு!
சென்னை காரப்பாக்கத்தில் உள்ள டெக் மஹிந்திரா அலுவலக குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் ஊழியர்களை பாதுகாப்பாக வெளியேற்றி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சென்னை காரப்பாக்கத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா அலுவலகத்தின் மின்னணு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ காரணமாக, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அலுவலக வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், முதலில் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர். பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசாரும் தீயணைப்புத்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்னணு பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியிலேயே தீ ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Prasanth Subramani