கோவை புத்தகத் திருவிழா 2026: ஜூலை 17 முதல் 26 வரை CODISSIA-வில் 10 நாட்கள் புத்தகத் திருவிழா!
கோவை புத்தகத் திருவிழா 2026 ஜூலை 17 முதல் 26 வரை CODISSIA வர்த்தக வளாகத்தில் நடைபெறுகிறது. 200-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 400-க்கும் மேற்பட்ட அரங்குகள், இலவச அனுமதி மற்றும் தினசரி இலக்கிய, இசை, அறிவியல் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (CODISSIA) சார்பில், 10வது கோவை புத்தகத் திருவிழா (Coimbatore Book Festival 2026) ஜூலை 17 முதல் 26, 2026 வரை கோடிசியா வர்த்தக வளாகத்தில் (CODISSIA Trade Fair Complex) 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், புத்தக ஆர்வலர்களுக்கு பல்வேறு வகையான நூல்களை ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் இந்த புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. மேலும், ஆன்லைன் விற்பனையால் சவால்களை எதிர்கொண்டு வரும் பதிப்பகங்களுக்கு ஆதரவளிக்கும் முக்கிய தளமாகவும் இந்த நிகழ்வு அமைகிறது.
இந்த ஆண்டின் புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் டெல்லி உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன.
தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும் இந்த திருவிழாவிற்கு அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் visitor.codissia.com இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் அல்லது நிகழ்விடத்தில் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பதிவு செய்து உள்ளே செல்லலாம்.
ஜூலை 17 மாலை 6.00 மணிக்கு ஹால் A-வில் நடைபெறும் தொடக்க விழாவில், கோவை வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் M. Rani Kanchana, IRS தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
தொடக்க நாளில் வாழ்நாள் சாதனையாளர் விருது Dr. K. Rathanam அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இளம் எழுத்தாளர்கள் விருதுகள் G. Ananthaprabhu (கவிதை), G. Krishnamurthy (புனைகதை) மற்றும் Dr. G. Manthirikumar (புனைவல்லாத இலக்கியம் – சிறப்பு பாராட்டு) ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன.
திருவிழா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான புத்தக வினாடி வினா, புத்தகப் புதையல் வேட்டை, அறிவியல் சந்திப்பு, ஒரு பக்கக் கதைப் போட்டி பரிசளிப்பு, சிறப்பு சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள், நகைச்சுவை பட்டிமன்றம், புத்தக வெளியீட்டு விழாக்கள், கவிதைப் பயிற்சிகள், கதை சொல்லல் நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறவுள்ளன.
மேலும், பிராந்திய அறிவியல் மையத்தின் ஒத்துழைப்புடன் தொல்லியல் கண்காட்சி மற்றும் நவீன தொலைநோக்கி மூலம் இரவு வானியல் பார்வை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவிநாசி சாலையிலிருந்து இலவச ஷட்டில் பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், குடும்பத்துடன் கலந்து கொண்டு புத்தகங்களையும் பல்வேறு அறிவியல் மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகளையும் ரசிக்க பொதுமக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் இந்த ஆண்டைய கோவை புத்தகத் திருவிழாவிற்கு வருகை தருவார்கள் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Prasanth Subramani