கோவையில் 20 கி.மீ புதிய நெடுஞ்சாலை... மதுக்கரை–செலக்கரிச்சல் இணைக்கும் மெகா திட்டம்!
கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மதுக்கரையில் இருந்து செலக்கரிச்சல் வரை 20 கிலோமீட்டர் புதிய நெடுஞ்சாலை அமைக்க நகர் ஊரமைப்பு துறை பரிந்துரை வழங்கியுள்ளது.
கோவை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், மதுக்கரையில் இருந்து செலக்கரிச்சல் வரை புதிய 20 கிலோமீட்டர் நீள நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்திற்கு நகர் ஊரமைப்பு துறை பரிந்துரை வழங்கியுள்ளது.
புதிய சாலை, பாலக்காடு சாலையில் உள்ள மதுக்கரையை தொடங்கி மதுவராயம்பாளையம், செட்டிபாளையம், ஓராட்டுக்குப்பை, கள்ளிப்பாளையம், பாரப்பட்டி மற்றும் எஸ்.என். பாளையம் வழியாக செலக்கரிச்சலை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 50 மீட்டர் அகலமுள்ள நேர்தட (Straight Corridor) அடிப்படையில் உருவாக்கப்படவுள்ளதாகவும், சுமார் ₹4 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நெடுஞ்சாலை செயல்பாட்டுக்கு வந்தால், கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறிப்பிடத்தக்க அளவில் குறையும். மேலும் பயண நேரம் வெகுவாக சுருங்குவதுடன், பாலக்காடு சாலையில் கனரக மற்றும் இலகுரக வாகனங்களின் போக்குவரத்தும் சீராகும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
Prasanth Subramani